உலகம்

திடீரென பற்றி எரிந்த 80 வீடுகள்.. உடல் கருகி 8 பேர் பலி: பிலிப்பைன்சில் நடந்த கொடூரம்!

1) ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

2-ம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் யூதர்களை தாக்கியது போல ரஷியா தங்களை தாக்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் கூறியிருந்தார். இது தொடர்பாக பேசிய ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், “உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட சில பிரமுகர்கள் யுதர்களாக இருந்தாலும் கூட அங்கு நாஜி கூற்றுகள் இருக்கும். ஏனெனில் ஹிட்லருக்கும் யூத இரத்தம் இருந்தது. மிகவும் தீவிரமான யூத எதிர்ப்பாளர்கள் பொதுவாக யூதர்கள்தான் என்று புத்திசாலியான யூத மக்கள் கூறுகிறார்கள்” என்றார். யூதர்கள் குறித்த அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

2) பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்த முதியவர்!

சீனாவில் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனையில் கூறப்பட்ட முதியவர் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஷாங்காய் நகரில் புட்டுவோ மாவட்டத்தில் உள்ள முதியோருக்கான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டார் என தவறுதலாக கூறப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து சென்றனர். ஆனால், அவர் உயிருடன் இருந்துள்ளார். அவரது உடல் பாகங்கள் அசைந்துள்ளன. இதனால், பரிசோதனை கூடத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் பின்னர் அவரது உடல்நலம் சீரடைந்தது.

3) ஜப்பானிய பிரதமர் வாடிகனில் போப் பிரான்சிஸ் உடன் நாளை சந்திப்பு!

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாடிகனில் நாளை போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேசுகிறார். ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாடிகனில் நாளை போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேசுகிறார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே 2014ம் ஆண்டு வாடிகனுக்கு பயணம் மேற்கொண்டார். 8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக வாடிகனுக்கு ஜப்பான் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பில், அணு ஆயுதங்களற்ற உலகிற்கான ஆதரவை போப் பிரான்சிஸிடம் ஜப்பானிய பிரதமர் கிஷிடா கோருவார் என கூறப்படுகிறது.

4) பல்கலைக்கழக வளாக குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

பிலிப்பைன்சில் பல்கலைக்கழக வளாக குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர். பிலிப்பனை்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா அருகே அமைந்துள்ள கியூசன் நகரில், பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியது. ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றியதில் சுமார் 80 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. மேலும், இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 சிறுவர்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

5) நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து செய்ய பரிசீலனை!

நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது குறித்து ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தானின் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்யவோ அல்லது இடைநிறுத்தவோ மத்திய அரசுக்கும், பஞ்சாப் மாகாண அரசுக்கும் அதிகாரம் உள்ளது. அதோடு முன்பு ‘தவறாக’ தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோர்ட்டில் மீண்டும் வழக்குத் தொடரவும் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம்” என்றார்.

Also Read: காத்துவாக்குல 3 காதல்.. 6 பிள்ளைகள் முன்னிலையில் 3 காதலிகளை திருமணம் செய்த காதலன்; ம.பியில் ருசிகரம்!