உலகம்

ரஷ்யாவிலிருந்து மூட்டையை கட்டிய இன்ஃபோசிஸ்; பாக்., பிரதமரை வாழ்த்திய அமெரிக்கா: உலகச் செய்திகளின் துளிகள்

1) மகிந்த ராஜபக்சே அழைப்பை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள்!

போராட்டக்காரர்கள் விரும்பினால் அவர்களது பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடந்த தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் பேச்சு வார்த்தை நடத்த மகிந்த ராஜபச்சே விடுத்த அழைப்பை போராட்ட குழுவினர் நிராகரித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நீங்களும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்றே இங்கு குவிந்து இருக்கிறோம். எந்த பேச்சுவார்த்தைக்கு முன்பும் அதிபர் கோத்தபய ராஜபக்சே கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். ராஜபக்சே குடும்பத்தினருக்கும், அவர்களது அரசாங்கத்துக்கும் இடமில்லை என்றனர்.

2) மரியுபோல் நகரை கைப்பற்றுகிறது ரஷியா

மரியுபோல் நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில் முன்னேறியுள்ளது. இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது. மரியுபோலை பாதுகாத்து வந்த உக்ரைன் வீரர்களுக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் சில நாட்களாக கிடைக்கவில்லை. அவர்களை ரஷிய படையினர் சுற்றி வளைத்து விட்டனர். இதனால் உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர். மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

3) பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்கா வாழ்த்து!

பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள். பாகிஸ்தான் அரசாங்கத்துடன் நீண்டகால ஒத்துழைப்பைத் தொடர நாங்கள் விரும்புகிறோம். வலுவான, வளமான மற்றும் ஜனநாயக பாகிஸ்தானை நமது இரு நாடுகளின் நலன்களுக்கும் இன்றியமையாததாக அமெரிக்கா கருதுகிறது என தெரிவித்துள்ளார்.

4) ஆஸ்திரேலிய கரையில் செத்து ஒதுங்கிய கடல் டிராகன்கள்

ஆஸ்திரேலிய கடற்பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய வகை கடல் டிராகன்கள் அதிக அளவில் கரையில் செத்து ஒதுங்கியுள்ளன. ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் வசித்து வருபவவை கடல் டிராகன்கள்.

நீண்ட மூக்குடன், பார்ப்பதற்கு குட்டி டைனோசார்கள் போன்று காணப்படும் அரிய இன வகையான இந்த கடல் டிராகன்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக கடல்நீரில் வாழ்கின்றன. டைனோசார்கள் காலத்தில் இருந்தே வாழ்ந்து வரும் இவை தற்போது எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. சமீப நாட்களாக இவை திடீரென அதிக அளவிலான எண்ணிக்கையில் கரையில் செத்து ஒதுங்கி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

5) ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனத்தை மூட முடிவு..!

ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாகவும், வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவரான நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷிதாவை பிரிட்டன் நிதியமைச்சரான ரிஷி சுனக் திருமணம் செய்துள்ளார். இன்போசிஸ் நிறுவன பங்குகளில் சுமார் 400 மில்லியன் பவுண்ட் அளவில் அக்ஷிதாவிற்கு உள்ளது. இதனால் ரஷியாவிலிருந்து ஆதாயம் பெற்று வருவதாக ரிஷி சுனக் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனை ரிஷி சுனக் மறுத்தார். இந்த சூழ்நிலையில் ரஷியாவில் செயல்பட்டு வந்த இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாகவும், அங்கு அனைத்து வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: நாஜி பாணியில் வணக்கம் செலுத்திய ரஷ்ய வீரர்.. கார் ரேஸில் இருந்து தூக்கப்பட்ட 15 வயது சிறுவன்!