உலகம்

"ஒரு கிளாஸ் டீ ரூ.100" : பொருளாதார நெருக்கடியால் ஒவ்வொரு நாளும் உயிர் வாழவே போராடும் இலங்கை மக்கள்!

கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் வாழும் மக்கள் ஒவ்வொரு நாளும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பெரிய வருவாய் என்றால் அது சுற்றுலாத்துறைதான். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதனால், அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செல்வதில் அந்நாட்டிற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை ரூ.5000, சர்க்கரையின் விலை ரூ.230, வெங்காயத்தின் விலை ரூ.450, பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.1000, என தினந்தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் அரிசி ஒரு கிலோ ரூ.448க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.263க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு முட்டை ரூ.28க்கும் ஒரு ஆப்பிள் ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கடைகளில் ஒரு கிளாஸ் டீ ரூ.100க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டு மக்கள் எந்த ஒரு பொருளையும் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படியே விலை உயர்ந்து கொண்டே சென்றால், இந்த நாட்டில் எங்களால் வாழ முடியாது என கூறி அந்நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Also Read: டி.ராஜேந்தரின் கார் ஏறி ஒருவர் பலி.. அதிர்ச்சி கிளப்பும் CCTV காட்சி - நடந்தது என்ன?