உலகம்

தாயை சுட்டுக்கொன்ற 3 வயது மகன்.. தந்தையை கைது செய்த போலிஸ் : நடந்தது என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ரோமல் வாட்சன். இவரது மனைவி டீஜா பென்னட். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மகனுடன் டீஜா பென்னட் ஷாப்பிங் சென்றுள்ளார்.

பிறகு ஷாப்பிங் முடித்துவிட்டு, மகனை காரின் பின் இருக்கையில் அமரவைத்துள்ளார். இதையடுத்து ஓட்டுநர் இருக்கையில் டீஜா அமர்ந்து காரை இயக்கியுள்ளார். அப்போது, பின் இருக்கையிலிருந்த மகன் அங்கிருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து விளையாடியுள்ளான்.

அப்போது சிறுவனின் கை தவறுதலாக ரிவால்வரில் பட்டுள்ளது. பின்னர் துப்பாக்கியில் இருந்து வெளியே வந்த குண்டு பென்னட்டின் முதுகுப்பகுதியில் பாய்ந்தது. பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவன் கையில் அலட்சியமாகத் துப்பாக்கி கிடைக்கும்படி வைத்திருந்த காரணத்தினால் அவரது தந்தை ரோமல் வாட்சனை கைது செய்தனர்.

மேலும், அவர் சட்டவிரோதமாகப் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை காரில் கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் சிறுவனுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: துப்பாக்கியால் கர்ப்பிணி மனைவியை சுட்டு கொன்ற போலிஸ்.. மதுபோதையில் நடந்த கொடூரம் !