உலகம்

ஒருபுறம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் தாக்குதலை விரிவுபடுத்திய ரஷ்யா - உக்ரைனில் நடப்பது என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா 17வது நாளாகத் தனது தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இதனால் சொந்த மண்ணை விட்டு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்தே செல்வதால் இருநாட்டினரும் போரை நிறுத்தவேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது.

இதன் காரணமாக அமெரிக்காக உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் ரஷ்யாவிற்குப் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. அதேபோல் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 300 டாளருக்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் எங்களுக்குத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்துக்கொண்டே இருந்தால் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஏற்கனவே ரஷ்ய ராணுவம் உக்ரைனின் கீவ், கார்கிவ், மரியுபோல் நகரங்களைத் தாக்கிவந்த நிலையில் மேற்கு உக்ரைன் பகுதிகளிலும் தனது தாக்குதலை விரிவு படுத்தியுள்ளது. அதேபோல் ரஷ்ய ராணுவத்தை எளிதில் வெற்றி பெற்று விடமுடியாமல் உக்ரை வீரர்கள் தடுத்து வருகின்றனர்.

இந்த போரை நிறுத்த இரு நாட்டு அதிகாரிகளும் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாடுகளும் தயாராக இருந்து கொண்டே தாக்குதல் நடந்து வருவதாகல் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் தனது தாக்குதலை உக்ரைன் முழுமையும் விரிவுபடுத்தியிருப்பதன் மூலம் விரைவில் அந்த நாட்டை ரஷ்ய அதிபர் புடின் கைப்பற்றி விடுவதற்காக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read: “ரஷ்யா - உக்ரைன் போர்.. கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு?” : கதிகலங்கும் உலக நாடுகள் !