உலகம்

“எல்லாம் போலி வாக்குறுதிகள்..” : ஒன்றிய அரசின் மெத்தனத்தால் குண்டடிபட்ட இந்திய மாணவர் வேதனை!

உக்ரைன், ரஷ்யாவிற்கு இடையேயான தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டைநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மேலும் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களை உலக நாடுகள் விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. இந்தியாவும், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்டு வருகிறது.

இருப்பினும், மீட்பு பணியில் ஒன்றிய அரசு வேகம் காட்டாமல் இருப்பதால் ஏராளமான மாணவர்கள் இன்னும் உக்ரைனிலேயே சிக்கி உணவு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மாணவர் ஒருவர் கீவ் நகரில் நடைபெற்ற தாக்குதலின்போது குண்டடிபட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குண்டடி தாக்குதலுக்கு உள்ளான மாணவர் ஹர்ஜோத் சிங் தனக்கு நடந்த சம்பவம் குறித்து வேதனையுடன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், "கீவ் நகரத்தில் இருந்து நண்பர்களுடன் சேர்ந்து காரி லிவ் நகருக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது வழியில் திடீரென தாக்குதல் நடைபெற்றது. இதில் எனது தோள்பட்டையில் ஒரு குண்டு பாய்ந்தது.

நான் வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தேன். பின்னர் எழுந்து பார்த்தபோது கீவ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். கீவ் நகரத்தில் இருந்து வெளியேற பல முறை இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள முயற்சித்தேன்.

ஆனால் யாரும் என்னை திருப்பி தொடர்பு கொள்ளவில்லை. இப்போது அங்கு என்ன நடக்கிறது என்பது உலகத்திற்குத் தெரியும். எல்லோரும் போலி வாக்குறுதிகள்தான் அளித்து வருகின்றனர். என்னைப் போன்ற பலரும் கீவ் நகரத்தில் சிக்கியுள்ளனர்.

தூதரக அதிகாரிகள் ஒரே ஒரு முறை தொடர்பு கொண்டபோது, நீங்கள் எங்களுக்கு முன்னதாகவே தூதரகத்தை காலி செய்துவிட்டு லிவ் நகருக்குச் சென்றுவிட்டீர்கள். தூதரகம் இயங்கி மாணவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா என்று கேட்டேவிட்டேன்" என வேதனையுடம் கூறியுள்ளார்.