உலகம்

கலிபோர்னியா சாலையில் கொட்டிக்கிடந்த பணம்.. அள்ளிச்சென்ற மக்கள்: நடந்தது என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வெள்ளியன்று காலை கண்டெய்னர் டிரக் ஒன்று நிறையப் பணத்துடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கண்டெய்னரில் இருந்து ரூபாய் நோட்டுகள் சாலையில் பறக்கத் தொடங்கியது.

இதனால் சாலை முழுவதும் பணமாகவே இருந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் உடனே தங்களின் வாகனங்களை நிறுத்தி சாலையிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றனர். இதைக் கவனித்த கண்டெய்னர் ஓட்டினர் உடனே வாகனத்தை நிறுத்தினார்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை மற்றும் போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாலையிலிருந்து பணத்தை எடுத்தவர்கள் திருப்பி ஒப்படைக்கும் படி அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து பலர் எடுத்த பணத்தை அதிகாரிகளிடம் கொடுத்தனர். ஆனால், சிலர் பணம் கிடைத்தால் போதும் என அங்கிருந்து நழுவிச் சென்றனர். சாலையிலிருந்த பணத்தை யார் யார் எடுத்துள்ளனர் என்பது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதைவைத்து பணம் எடுத்துச் சென்றவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்டெய்னர் டிரக்கில் கொண்டு வரப்பட்ட பணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டிரக்கில் இருந்து பணமழை பொழிந்தது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: முன்னாள் துணைப் பிரதமர் மீது பாலியல் புகார்: மாயமான பிரபல டென்னிஸ் வீராங்கனை : சக வீரர்கள் அதிர்ச்சி!