உலகம்

“ரஷ்யாவில் மீண்டும் ஊரடங்கு.. ஒரேநாளில் 40,000 பேர் பாதிப்பு - 1,000 பேர் பலி” : கலக்கத்தில் உலக நாடுகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அனைத்து நாடுகளும் பெருமூச்சுவிடும் நேரத்தில், டெல்டா வைரஸ் காரணமாக மீண்டும் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளில் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதில் ரஷ்யாவின் நிலைமை கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தற்போதுவரை ரஷ்யாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில், 1,159 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 235,057 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் 40,096 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,392,697 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். மேலும், தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அதிபர் புதின் பார்வையிட்டார். மேலும், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் முதல்கட்டமாக அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே நடமாடவும், பயணம் செய்யவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது உலக நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கொரோனா பரவலால் மீண்டும் சீனாவில் ஊரடங்கு... வீட்டுத்தனிமையில் 23 ஆயிரம் பேர் : உலக நாடுகள் பீதி!