உலகம்

“கடந்த 20 வருசத்துல நீங்க படிச்ச எதுவுமே செல்லாது” : தாலிபான்கள் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஆப்கன் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படை வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். பிற்போக்குத்தன்மை மிகுந்த தாலிபான்களால் அந்நாட்டில் பெண்கள் மிகக் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஆண்கள் தாடியை குறைக்கவோ, மழிக்கவோ கூடாது என்றும்; பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் பல்வேறு அடாவடி உத்தரவுகளை தாலிபான்கள் பிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாலிபான்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்த 2000 முதல் 2020ஆம் ஆண்டு வரை பள்ளிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும் படித்துப் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று தாலிபான்கள் அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபான் அரசின் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்கள் ஆட்சியில் இல்லை. அந்த காலகட்டத்தில் நேட்டோ, அமெரிக்கப் பாதுகாப்பில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் ஆட்சி செய்தனர்.

அப்போது, பள்ளி, கல்லூாரி, பல்கலைக்கழகங்களில் படித்து மாணவர்கள் பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இன்று உள்ள முதுகலைப் படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை.

அதனால், தாலிபான்களின் தேசத்துக்குப் பயன்படும், மதிப்புகளை உணர்ந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பணியமர்த்த இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உள்ளிட்ட பலரும் கல்வி கற்று சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்த நிலையில், தாலிபான் அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாங்கள் ஆட்சியில் இல்லாதபோது பெற்ற பட்டங்கள் செல்லாது என தாலிபான்கள் அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை போட்ட தாலிபான்கள் : கடும் கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் ஆப்கன் ஆண்கள்!