உலகம்

ஏமன் நாட்டின் மர்மக்குழி.. வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த ஆராய்ச்சியாளர்கள் - வியப்பூட்டும் தகவல்கள்!

ஏமன் நாட்டில் அல்மாரா பாலைவனம் உள்ளது. இந்த பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய குழி உள்ளது. இந்த குழியை அப்பகுதி மக்கள் ‘பர்ஹட்டின் கிணறு’ அதாவது ‘மர்மக்குழி’ என்றே அழைத்து வருகின்றனர்.

மேலும் இந்த குழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், பூதம் இருப்பதாக இந்த ஊர்மக்கள் நம்புகிறார்கள். இதனால் இந்த குழி பகுதியின் அருகே செல்வதற்கே இவர்கள் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு, அப்படி என்னதான் இந்த குழியில் இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்து, துணிச்சலுடன் அக்குழியில் இறங்கி ஆய்வு செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த மர்மக்குழுயில் என்ன இருக்கிறது என்பதையும் இந்தக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து புவியியல் ஆய்வு மற்றும் கனிம வள ஆணையத்தின் இயக்குநர் ஜான் கூறுகையில், “இந்த குழி குகைபோன்று நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது.

அதிகமான பாம்புகள், இறந்த விலங்குகள், குகை முத்துக்கள் இருக்கின்றன. மக்கள் நம்புவது போல் இங்கு எந்த பூதமும் இல்லை. இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை இன்னும் ஆய்வு செய்யவில்லை. இந்த ஆய்வில் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதேபோல் பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்து கிடப்பதால் தான் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குழி பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பழமையானது என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்.

இருப்பினும் இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்யும் போது அது தெரியவரும். மேலும் இந்த மர்மக்குழி ஏமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “சாத்தானின் எண்.. ராசியில்லாத எண்..” : மூடநம்பிகையை தோளில் சுமக்கும் மக்கள் - 13ஆம் எண்ணின் பின்னணி?