உலகம்

”யார் வம்புக்கும் நாங்க போக மாட்டோம்; எங்க விஷயத்துலயும் தலையிடாதீங்க” - எச்சரிக்கும் தாலிபன் தளபதி?

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்காவின் கடைசி வீரரும் வெளியேறியதால் தற்போது முழுமையாகவே ஆப்கான் தாலிபன்களின் கீழ் வந்துள்ளது. இது அங்கு வாழும் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தாலிபன் தளபதி அனஸ் ஹக்கானி ஆங்கில செய்தி தொலைக்காட்சியான CNN News-18க்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், “எங்களுக்கு இது மிகப்பெரிய நாள். 20 ஆண்டுகளாக போராடியதற்கு கிடைத்துள்ள பலன். இது சுதந்திரம் பெற்ற நாள். எதிர்வரும் காலங்கள் அழகான நாட்களாக அமையும். எங்கள் கொள்கையில் யாரும் தலையிடக் கூடாது. நாங்களும் மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட மாட்டோம்.

சுமூகமாக தீர்வு காண்பதற்கு எப்போதும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும். உலக நாடுகளுடன் நல்லுறவையே விரும்புகிறோம். எங்களை பற்றி தவறாக எண்ணுவதை நாங்கள் விரும்புவதில்லை. விரைவில் எங்களின் அனைத்து கொள்கைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

எல்லா நாடுகளுக்கும் உதவியாக இருப்பதையே விரும்புகிறோம். அதேபோல ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். தொடக்கத்தில் இருந்த அச்சமெல்லாம் தற்போது போய்விட்டது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அனைத்து கொள்கைகளையும் வெளிப்படையாகவே அறிவிக்கிறோம். காஷ்மிர் எங்களது அதிகார வரம்பிற்குள் வராது. மேலும் அதில் தலையிடுவது எங்கள் கொள்கைக்கு எதிரானதும் கூட” எனக் கூறியுள்ளார்.

Also Read: ‘இலுமினாட்டி’ கதை தொடங்கியது எப்படி? : உண்மையிலேயே அப்படி ஒரு குழு இருக்கிறதா?