உலகம்

“பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா?” : பரவிய செய்திக்கு தாலிபான்கள் மறுப்பு!

டேனிஷ் சித்திக்கை ஆப்கன் ராணுவத்தினரால் காப்பாற்ற முடியவில்லை என்று ஆப்கன் படைத் தளபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கன் படையினருக்கும், தாலிபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் புலிட்சர் விருது வென்ற இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கடந்த மாதம் உயிரிழந்தார்.

இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், ஆப்கனில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த மாதம் 16ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்தது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்று டேனிஷ் சித்திக்கை தாலிபான்கள் துடிதுடித்துக் கொன்றதாக செய்தி வெளியிட்டது. இந்த தகவலை தாலிபான்கள் மறுத்துள்ளனர்.

ஆப்கன் படைத்தளபதி ஹைபதுல்லா அலிசாய் கூறுகையில், “கந்தஹாரில் கடுமையான சண்டை நடந்துகொண்டிருந்தது. அப்போது புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக்கை காப்பாற்ற முடியாமல் ஆப்கன் ராணுவம் அப்படியே விட்டுவிட்டது.

ஆப்கன் ராணுவம் பின்வாங்கியபோது, அதிலிருக்கும் ஒரு வாகனத்தில் டேனிஷ் சித்திக் சென்றுவிட்டார் என ஆப்கன் ராணுவத்தினர் நினைத்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது சொகைல் ஷகீம் கூறுகையில், “டேனிஷ் சித்திக், தாலிபான்களால் கொலை செய்யப்படவில்லை. தாக்குதல் நடக்கும் இடங்களுக்கு சித்திக் தனியாக சென்றதால் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்துவிட்டார். அவரை தாலிபான்கள் பிடித்து சித்ரவதை செய்தனர் என்பது தவறான தகவல்” எனத் தெரிவித்துள்ளார்.