உலகம்

தடுப்பூசி நிறுவனங்களுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் முக்கிய வேண்டுகோள்!

“தடுப்பு மருந்து நிறுவனங்கள் எம்-ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை உலக நாடுகளின் நலனை கருத்தில்கொண்டு வெளியிடவேண்டும்” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை அதிவேகமாகப் பரவிவருவதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

இதுதொடர்பாகக் கூறியுள்ள அவர், “கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததுபோலத் தெரிந்தாலும் இன்னும் நாம் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை. எந்த நாட்டு அரசும் ஊரடங்கு விதிகளைத் தவிர்க்கக்கூடாது .

டெல்டா கொரோனா வைரஸ் பரவலால் உலகம் ஆபத்தில் உள்ளது. இந்தியாவில் உருவான டெல்டா ரக கொரோனா வைரஸ் தற்போது உலகின் 98 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் ஆபத்தானதாக டெல்டா வைரஸ் திகழ்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பல படுக்கை வசதி இன்றி மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஏதாவது ஒரு நாடு தடுப்பூசியை முழுமையாக செலுத்தவில்லை என்றாலும் அது உலகின் பிற நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தடுப்பு மருந்து நிறுவனங்கள் எம்-ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை உலக நாடுகளின் நலனை கருத்தில்கொண்டு வெளியிடவேண்டும். தடுப்பு மருந்துகளை விரைவாக உருவாக்கி பிரயோகித்தால்தான் வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.

கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு உலக நாடுகளின் தடுப்பு மருந்து நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: "27% இடைவெளியை நினைவில் கொள்ளுங்கள்.. எங்கே தடுப்பூசி?": ஒன்றிய அரசுக்கு மீண்டும் கேள்வி தொடுத்த ராகுல்!