உலகம்

இனவெறிக் கொலையை உலகிற்கே அடையாளம் காட்டிய இளம்பெண்ணுக்கு புலிட்சர்... விருது பெறுவோர் விபரம்..!

புலிட்சர் விருதானது, 1917-ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் ஊடகப் பிரிவில் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் மின்னிகியூ போலீஸ் நகர காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் என்பவரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை 17 வயது அமெரிக்க இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோவே உலகம் முழுவதும் பரவி, அமெரிக்காவில் போராட்டம் வெடித்ததற்கும், உலகளாவிய அலை எழுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

நீதிமன்றத்திலும் டார்னெல்லா தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். ஓராண்டு விசாரணைக்குப் பிறகு கொலை செய்த காவல் அதிகாரியின் குற்றம் உறுதியாகி தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இனவெறியால் நிகழ்ந்த கொலையை வீடியோவாகப் பதிவு செய்து வெளியுலகிற்குச் சொன்ன இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு சிறப்பு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எமிலியோ மொரநாட்டி என்ற புகைப்பட கலைஞர், இந்த ஆண்டு 2 பிரிவுகளில் 'புலிட்சர்' விருதினைப் பெறுகிறார். இவர் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சீனாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டதற்காக புலிட்சர் விருது பெறுகிறார்.

இன ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கியதற்காக ராய்டர்ஸ் நிறுவனத்திற்கும் 'புலிட்சர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 'இலக்கிய மாமணி விருது - கனவு இல்லம்' : எழுத்தாளர்களை வியப்பில் ஆழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் !