உலகம்

சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட கப்பலால் விலைவாசி உயரும் அபாயம்... அச்சத்தில் உலக நாடுகள்!

உலகிலேயே மிகப் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் முதன்மையானது சூயஸ் கால்வாய். எகிப்து நாட்டில் உள்ள இந்த கால்வாய் மூலம் மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் கப்பல்கள் வாயிலாக கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தக் கால்வாய் இல்லையென்றால் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கடல்வழி பயணமே இருக்காது. இந்த வழியை கடப்பதற்கு குறைந்தது 34 நாட்கள் ஆகும். இந்தப் பாதையில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 கப்பல் செல்கின்றன. குறிப்பாக இந்தக் கால்வாய் மூலம் உலகளாவிய வர்த்தகத்தில் 12 சதவிகிதமும், இயற்கை எரிவாயு உள்ளிட்ட திரவங்கள் 8 சதவிகிதமும் சுமார் ஒரு மில்லியன் எண்ணெய் பீப்பாய்களும் எழுத்துச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில், எவர் கிவன் எண்ணெய்க் கொள்கலன் (Ever Given) கப்பல் இந்த கால்வாயில் மாட்டிக்கொண்டுள்ளது. சுமார் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றான Ever Given பக்கவாட்டில் மாட்டிக்கொண்டதால் சூயஸ் கால்வாய் வழியே ஸ்தம்பித்துள்ளது.

கடந்த மார்ச் 22ம் தேதி எவர் கிவன் எண்ணெய்க் கொள்கலன் கப்பல் சீனாவில் இருந்து நெதர்லாந்து துறைமுகத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் ஆயிரக்கணக்கான டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடலுக்குச் செல்லும் வழியில் தான் சூயஸ் கால்வாய் உள்ளது.

இந்த சூயஸ் கால்வாயில் இருந்து மார்ச் 23 புறப்பட்டுச் சென்ற எவர் கிவன் எதிர்பாரத விதமாக திடீரென வீசிய காற்றால் தன் கட்டுப்பாட்டை இழந்து, கப்பலின் முன் பகுதி கால்வாயின் வடக்கு கரையின் பக்கவாட்டில் மோதியது. இதனால் கப்பல் திருப்பமுடியாத நிலையில் மாட்டிக்கொண்டது.

அதேவேளையில் கப்பலின் பின்பகுதியும் காற்றின் வேகத்தால் மேற்கு திசை பகுதியில் நகர்ந்து மறு கரையில் பலமாக மோதியுள்ளது. இதனால் சூயஸ் கால்வாயில் மிகப்பெரும் போக்குவரத்து நெருக்கடி உருவாகி இருவழிகளிலும் செல்லவேண்டிய நூற்றுக்கணக்கான கொள்கலக் கப்பல்கள் செல்ல வழியின்றி மாட்டி ஸ்தம்பித்து நிற்கின்றன.

இந்த நிலையில் கப்பலை மீட்கவே பல நாட்கள் எழக்கூடும் என்றும், இந்த நிலையில் கப்பல் ஓரிரு நாட்களுக்குள் சரி செய்யப்படவில்லை என்றால், உலக வர்த்தக சந்தையில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் தேவை அதிகரிப்பால் விலை உயர்வு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உலக வர்த்தக, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பழைய கால்வாய்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக எகிப்து அரசு கூறியுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணியில் பல இழுவைப் படகுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கப்பலில் உள்ள அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவோ வேறு எந்த அசம்பாவிதங்களொ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல்... ஸ்தம்பித்த உலக நாடுகள்... என்ன நடக்கிறது எகிப்தில்?