உலகம்

“வேளாண் சட்டங்கள் குறித்து கவலைப்படுகிறோம்” - அமெரிக்க அரசு தலையிடக் கோரி அந்நாட்டு எம்.பிக்கள் கடிதம்!

இந்திய விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இந்திய அரசிடம் இதுகுறித்துப் பேச வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 7 அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. கனடா பிரதமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அரசுடன் பேசும்படி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டு எம்.பி. பிரமிளா ஜெயபால் உட்பட ஏழு எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தத்க் கடிதத்தில், “வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகள் போராட்டம் என்பதை பஞ்சாப் மாநிலத்தோடு தொடர்புடைய சீக்கிய அமெரிக்கர்கள் தொடர்பானது மட்டுமல்ல, அமெரிக்காவில் வசிக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களோடும் தொடர்புடையது.

அமெரிக்காவில் வாழும் பல இந்தியர்கள், இந்தியாவில் வாழும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், இந்தச் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களின் பூர்வீக நிலம் பாதிக்கப்படும் என்று கவலைப்படுகிறார்கள்.

இது மிகவும் தீவிரமான சூழல். ஆதலால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தொடர்பு கொண்டு விவசாயிகள் போராட்டம் குறித்த கவலைகளையும், வெளிநாடுகளில் அரசியல் பேச்சு சுதந்திரத்தைக் காக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இந்தியா தன்னுடைய கொள்கைகளை வடிவமைக்க உரிமை இருக்கிறது. அதேசமயம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களின் உரிமையை மதிக்க வேண்டும். அவர்களின் பொருளாதார பாதுகாப்பு மீது நடத்தப்படும் தாக்குதலையும் கவனிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: “எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அய்யா நல்லகண்ணு ஒரு வழிகாட்டி”- நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து!