உலகம்

பூமி சுற்றும் வேகத்தைக் குறைக்கும் சீனா... உலகின் மிகப்பெரிய அணை உடையும் அபாயம்!

உலகின் மிகப்பெரிய அணையான சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை வெள்ளத்தால் உடைந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அணையின் நீளம் 2.2 கி.மீ. உயரம் 185 மீ. இந்த அணையின் கொள்ளளவு 39.3 கன கி.மீ. 2,250 கோடி டாலர் செலவில் 17 ஆண்டுகள் 40,000த்திற்கும் மேற்பட்டோர் பணி செய்து இந்த அணையைக் கட்டி முடிந்தனர்.

இப்போது இந்த அணையால் பல நகரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருவதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கமான நீர்மட்ட அளவை விட பல மடங்கு நீர்மட்டம் உயந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்பட்டுள்ளது. எனினும் அணை உடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் பல லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த அணையைப் பற்றிய இன்னொரு தகவல் வியப்பளிக்கக் கூடியது. த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டதால் ஒரே இடத்தில் மிக அதிகமான அளவு தண்ணீர் தேங்குவதால் பூமியின் வேகம் 0.06 மில்லி செகண்ட் குறைந்தது என நாசா உள்ளிட்ட விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு பொருள் நிலையாகவோ, இயக்கத்திலோ இருக்கும்போது அதன் நிலையை மாற்றும்படி விசையைச் செலுத்தினால், அந்த விசையை அப்பொருள் எதிர்க்கும். இது இயற்பியலில் நேரியல் மந்தநிலை (Linear Inertia) எனப்படுகிறது.

பொருட்களின் சடத்துவ திருப்புத் திறனைப் பொறுத்து (Moment of Inertia) இயங்கும் வேகம் மாறுபடும். புவி சுழலும்போது புவிப் பெருந்திரள் (Mass) அச்சுக்கு அருகில் சுழலும்போது வேகமாகவும், புவிப் பெருந்திரள் அச்சை விட்டு தள்ளிச் சுழலும்போது மெதுவாகவும் சுழலும்.

மிகப்பெரியதான த்ரீ கோர்ஜஸ் அணையில் நிறைந்துள்ள நீரின் நிறை 40 லட்சம் கோடி கிலோகிராம் என்பதாலும், இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 181 மீட்டர் உயரத்தில் இருப்பதாலும் பூமியின் Moment of Inertia அதிகமாகி புவி சுழலும் வேகம் 0.06 மில்லி செகண்ட் குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

புவியின் நிறையோடு ஒப்பிடுகையில் இந்த அணை நீரின் நிறை மிகக் குறைவானது என்பதால் இதனால் பெரிய மாறுதல் எதுவும் நிகழ்வதில்லை. பல்வேறு காரணிகளால் புவி சுழலும் வேகம் மாறுபாடுகளைச் சந்திக்கும் என்பதால் இதனால் பாதிப்பு எதுவுமில்லை எனவும் விஞ்ஞானிகளால் விளக்கப்பட்டுள்ளது.