உலகம்

கொரோனா தோல்வியை மறைக்க WHO-வின் உறவை முறித்துக் கொண்ட அமெரிக்கா: டிரம்ப் முடிவால் நடக்கும் ஆபத்து என்ன?

சீனாவில் தொற்றத் துவங்கிய கொரோனா வைரஸ் அங்கு ஏற்படுத்திய உயிர்ச்சேதம், பாதிப்பைக் காட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலக வல்லரசான அமெரிக்கா, கொரோனா தொற்றினால் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றையும், பலியையும் கட்டுப்படுத்தாமல் அதிபர் ட்ரம்ப் அரசு திணறி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. 4 மாதங்களில் அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு ஒரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 1,01,762 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பின் கூட்டமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க நடைபெறும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக, ஐ.நா சபையின் கிளை அமைப்பாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் உலக சுகாதார நிறுவனம். சுமார் 194 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகத் தற்போது வரை இருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அந்த அமைப்புக்கு அதிக நிதி அளிக்கும் ஒற்றை நாடான அமெரிக்கா, கடந்த 2019இல் மட்டும் 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் அளித்துள்ளது. இந்த சூழலில் அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படவில்லை என்று உள்நாட்டிலேயே கடுமையான விமர்சணம் எழுந்துள்ளது. ஆனால் கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், “உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதராவாக இருப்பதுதெளிவாகத் தெரிகிறது. பெய்ஜிங்கால் அது கட்டுப்படுத்தப்படுகிறது. கொரோனா விவகாரத்தில் சீனாவின் பேச்சைக் கேட்டு உலகத்தை தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது.

சீன அரசாங்கத்தின் தவறான செயலின் விளைவாக உலகம் இப்போது பாதிக்கப்படுள்ளது. கொரோனா வைரஸ் வைரஸ் விவகாரத்தில் உலகத்தை தவறாக வழிநடத்த உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா அழுத்தம் கொடுக்கிறது.

எனவே உலக சுகாதார நிறுவனத்துடனான எங்கள் உறவை துண்டித்துவிட்டு, இதுவரை வழங்கப்பட்டு வந்த பங்குத்தொகையான 400 கோடி டாலர் நிதியை மற்ற உலகளாவிய பொது சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-பின் இந்த முடிவு பல்வேறு சுகாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என உலக நாட்டு தலைவர்கள் கருதுகின்றனர்.

Also Read: ‘டிரம்ப் வேண்டாம்’ - அமெரிக்க அதிபருக்கு எதிராக வெனிசுலா மக்கள் போராட்டம் : மீண்டும் ஒரு மக்கள் புரட்சி ?