உலகம்

“உலக நாடுகளின் உற்பத்தியில் ரூ. 637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்” - ஐ.நா பொதுச் செயலர் அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலகம் முழுக்க 60 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனாவுக்கு இதுவரை 3 லட்சத்து 64 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இவற்றோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் சிதைத்துள்ளது கொரோனா.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளின் உற்பத்தியில் 8.5 ட்ரில்லியன் டாலர் (637 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படும் என ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ கட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏராளமான நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டு வந்த உலகம், கொரோனா வைரஸ் மூலம் இதுவரை காணாத இடர்ப்பாட்டை சந்தித்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஓரணியில் நின்று ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.

இல்லையெனில், கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் சந்திக்க நேரிடும். ஆறு கோடிக்கும் அதிகமானோர் வறுமையில் தள்ளப்படுவர். உலகளவில் உழைக்கும் மக்களில் பாதி பேர் அதாவது 160 கோடி பேர் வேலையின்மையால் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

உலக நாடுகள் ஒற்றுமையின்மையால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிவதில்லை. இனிமேல், உலக நாடுகள் ஒற்றுமையாகச் செயல்பட்டு நிலையான பொருளாதார மீட்சிக்கும், மக்களின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்தியாவில் 67 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும்” : கொரோனா பரவல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!