உலகம்

“வாடகைத்தாய் மூலம் பிறந்த உலகின் முதல் சிறுத்தைக் குட்டிகள்” - அமெரிக்காவில் அபூர்வ நிகழ்வு!

செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பிறப்பது தற்போதைய நாகரீக உலகில் சாத்தியமானது. குழந்தைப் பேறு இல்லாத எத்தனையோ தம்பதிகள் சோதனைக் குழாய் தொழில்நுட்பம் மூலம் பலனடைந்துள்ளனர். அதேபோல் கருவுற இயலாத பெண்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் முறையும் உள்ளது.

ஆனால் உலகில் முதன்முறையாக விலங்குகளில் இவ்வகை கருத்தரித்தல் மருத்துவ முறையைப் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் டெலாவேர் கவுண்டியில் உள்ளது கொலம்பஸ் உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் ‘கிபிபி’ என்ற 6 வயது சிறுத்தை ஒன்று உள்ளது. ஒரு சில மருத்துவ காரணங்களால் ‘கிபிபி’ தாய்மை அடைய முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிபிபியின் சினை முட்டைகளைப் பிரித்து, ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்து அதை ‘இஸ்ஸி’ என்ற 3 வயது சிறுத்தையின் கருப்பைக்குள் ஆய்வாளர்கள் செலுத்தினர்.

இந்நிலையில், இஸ்ஸி சிறுத்தை இரண்டு குட்டிகளை ஈன்றதாக கொலம்பஸ் உயிரியியல் பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit: Columbus Zoo and Aquarium

உயிரியியல் பூங்காவின் விலங்கு சுகாதார துணைத் தலைவர் டாக்டர் ராண்டி ஜங்கே இதுகுறித்து கூறும்போது, ‘இஸ்ஸி சிறுத்தை, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிறுத்தைக் குட்டியை ஈன்றது.

இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் உயிரினங்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆய்வாளர்கள் இந்தச் சோதனை முயற்சியை மூன்றுமுறை செயல்படுத்தியுள்ளனர். முதல் இரண்டுமுறை வெற்றி கிட்டாத நிலையில் இம்முறை பலன் கிடைத்துள்ளது’, எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நடைபாதையில் பைக் ஓட்டி பாதசாரிகளை அச்சுறுத்தியவர்களுக்கு பாடம் புகட்டிய பெண்மணி... வைரல் வீடியோ!