உலகம்

’ப்ப்ப்பா... என்ன பார்வைடா இது’ : சமூக வலைத்தளங்களை புரட்டிப் போட்ட இசபெல்லாவின் பின்னணி தெரியுமா ?

சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் பிறந்த குழந்தை ஒன்று கடும் கோபத்தில் முறைப்பது போன்று இருந்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டது. மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அந்த புகைப்படத்தின் பின்னணி தற்போது வெளியாகி உள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த டையானே தி ஜீசஸ் பார்போஸா என்பவர் கடந்த பிப்ரவரி 10ம் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இசபெல்லா பெரேரா என்று பெயர் வைக்கப்பட்ட அந்த குழந்தை பிறந்த தேதியன்று வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி உலகம் முழுவதும் நெட்டிசன்களின் மனத்தைக் கவர்ந்துள்ளது. அதற்குக் காரணம் இசபெல்லா பிறந்ததும் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அழாமல் மருத்துவர்களைப் பார்த்தபடி இருந்ததுதான்.

அதனைப் பார்க்கும் போது குழந்தை மருத்துவர்களை முறைப்பது போலவே காட்சி தருகிறது. இசபெல்லா பிறக்கும் தருணத்தை பதிவு செய்வதற்காக அவரது தாயார் ஒரு புகைப்பட கலைஞரை ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி குழந்தை பிறந்தது முதல் அனைத்து அசைவுகளையும் படம் பிடிக்கும் போதுதான் இசபெல்லாவின் கோப முகம் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக புகைப்பட கலைஞர் ரோட்ரிகா கூறுகையில், “குழந்தை பிறந்த தருணத்தில் அவளை படமெடுக்க வேண்டும் என காத்திருந்தேன். வயிற்றில் இருந்து அவளை வெளியே எடுத்ததும், அழாமல் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் பிறந்த உடனே அழுவது வழக்கமான ஒன்று. குழந்தை அழத் தொடங்கினால் தான் தொப்புள் கொடியை வெட்டுவார்கள்.

ஆனால் இசபெல்லா பிறந்தபோது அழவில்லை. அதனால் இசபெல்லாவை அழ வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிரம் காட்டினர். அப்போது ’இசபெல்லா, அழு’ என மருத்துவர் ஒருவர் கூறினார்.

அப்போது தன்னுடைய கண்களை சுருக்கி இசபெல்லா மருத்துவரைப் பார்த்தார். இசபெல்லாவின் இந்த பார்வையால் ஒரு வினாடி மருத்துவரே திகைத்து போனார். இவள் முறைக்கிறாள் என்ற சத்துடன் மருத்துவர்கள் புன்னகைத்தவாறே இசபெல்லாவை அழ வைக்க முயற்சித்தனர்.

மருத்துவர்களின் முயற்சியால் ஒருவழியாக இசபெல்லா அழுததும் தொப்புள் கொடியை வெட்டினார்கள். அப்போது எடுத்த அழகிய புகைப்படம் தான் இது. என்னைப் பொறுத்தவரை விலை மதிக்கமுடியாத புகைப்படமாக இதனை நான் பார்கிறேன்” என தெரிவித்தார்.

தற்போது இசபெல்லா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இசபெல்லாவின் இந்த புகைப்படம் பார்ப்பவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.