உலகம்

“தொடர்பு இல்லாத நாடுகளுக்கும் பரவும் கொரோனா” வெகுவாக தீவிரமடைவதற்குள் தடுக்கவேண்டும்- எச்சரிக்கும் ஐ.நா!

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறது. கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரஸினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,109 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இஸ்ரேல், ஈரான், லெபனான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் பரவி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே சமீபத்தில் கூட ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் உள்ள பல நகரங்களில் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.இதுவரை ஈரானில் 4 பேர் கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாது இருக்கும் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், “சீனாவிற்கு வெளியே வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில், வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களோடு நேரடியாக எந்த தொடர்புமும் இல்லை; சீனாவிற்கு சென்றது இல்லை. ஆனாலும் இந்த வைரஸ் தாக்குதல் எப்படி தொற்றியது என்பதே புரியவில்லை. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பாக உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன் சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “ராகிங் கொடுமை; வாழ்வதற்கே விருப்பமில்லை” : மனம் வெம்பி தாயிடம் அழும் சிறுவன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ!