உலகம்

“கொரோனா வைரஸ் எப்படி பரவும்? என்ன பாதிப்பு ஏற்படும்?” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் WHO !

சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகள் வரை பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே நோயின் தாக்கத்தை எளிதில் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி மக்களை மேன்மேலும் அச்சத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமான WHO கொரோனா வைரஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக சில விளக்கங்களை அளித்துள்ளது. அதில், சீனாவை தாக்கியுள்ள இந்த கொரோனா வைரஸ், நாவல் கொரோனா வைரஸ் (nCoV) என அழைக்கப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த 2002ம் ஆண்டு சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome - SARS CoV) சீனாவில் உள்ள சிவெட் பூனைகளிடம் இருந்தும் மற்றும் 2012ம் ஆண்டு மெர்ஸ் (Middle East Respiratory Syndrome MERS CoV) சவுதி அரேபியாவில் ட்ரோமெடரி ஒட்டகங்களிடம் இருந்து பரவியது.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நாவல் (புதிய) கொரோனா வைரஸும் விலங்குகளிடம் இருந்தே பரவி இருப்பதற்கு எந்த நிரூபணமும் இல்லை. இருப்பினும், செல்ல பிராணிகளை கையாள்வதில் கவனம் தேவை. நாய், பூனை போன்றவற்றை கவனமாக கையாண்டு அவைகளையும், அதனை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இந்த நாவல் கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டால் மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமல், சுவாச பிரச்னை போன்ற அறிகுறிகள் தென்படும். நோயின் தாக்கம் அதிகரித்தால் நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். பின்னர் உயிரிழப்பும் நேரிடும்.

இது பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடியதாக உள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு என பிரத்யேக சிகிச்சையும் இல்லை, தடுப்பூசியும் இல்லை. இந்த வைரஸ் நோய்க்கு புதிதாக தடுப்பூசி கண்டுபிடிக்கவே பல ஆண்டுகள் எடுக்கும்.

ஆகையால், கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகளுக்கு தனித்தனியாகவே சிகிச்சை அளிக்க முடியும். தும்மல் மற்றும் இருமலின் போது மற்றவர்களின் கைக்குட்டைகள் எதையும் பயன்படுத்தாமல், தூய்மையானவற்றை கொண்டு தனித்தனியே உபயோகிக்க வேண்டும். இறைச்சியை நன்கு வேகவைத்த பிறகே உண்ண வேண்டும்.

நோய்த் தொற்று பரவுவதை மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த நாவல் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Also Read: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய 324 இந்தியர்களில் 53 பேர் தமிழர்கள்!