உலகம்

“இலங்கை தமிழர்களுக்கு சைகையால் கொலைமிரட்டல் விடுத்த அதிகாரி குற்றவாளி” - லண்டன் நீதிமன்றம் அறிவிப்பு!

லண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது லண்டனில் உள்ள இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அங்கு இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினார்கள். அப்போது இலங்கை தூதரக அதிகாரிகளுடன் வரிசையில் நின்று கொண்டிருந்த இலங்கை ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இலங்கை தமிழர்களை நோக்கி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் சைகை விடுத்திருக்கிறார்.

அந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இலங்கை ராணுவ அதிகாரி பெர்ணான்டோவிற்கு தமிழ் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. பின்னர் ராணுவ அதிகாரிக்கு எதிராக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனையடுத்து ராணுவ அதிகாரி பெர்ணான்டோ பதவியிலிருந்து விலக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டார். இதனிடையே ராணுவ அதிகாரியின் குற்றத்திற்காக தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எமா அர்பத்தொட் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் பெர்ணான்டோ, கழுத்தை வெட்டிவிடுவேன் என சைகை மூலம் மிரட்டும் வகையில் மூன்று முறை ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி காண்பித்ததாக புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதுதொடர்பாக நீதிபதி வழங்கிய தீர்ப்பில், ”இலங்கை ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இலங்கை தூதரகத்தின் அதிகாரியாக தொடர வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ”அதிகாரி பெர்ணான்டோ அங்கிருந்த நபர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதன் மூலம் சமூக பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். எனவே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். மேலும் 2000 ஸ்டேலின் பவுன்கள் அவருக்கு அபராதமாக விதிக்கப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் இலங்கைத் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read: மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுங்கள் - இலங்கை பிரதமரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை