கோப்புப்படம்
உலகம்

இலங்கையில் பெயர் பலகையில் இருந்த தமிழ் எழுத்துகள் அழிப்பு... பதற்றத்தை ஏற்படுத்துகிறதா ராஜபக்சே அரசு?

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அந்நாட்டு அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே. இவரைத் தொடர்ந்து அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்சேவும் இலங்கையின் பிரதமராக பதவியேற்றார்.

அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அமைச்சரவையில் 2 தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் அமைச்சராக பதவியேற்றனர். இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்திய அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் பொது அமைதியை ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலிஸாரை பாதுகாப்புக்காக நியமித்தார்.

இதனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அந்நாட்டின் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள தமிழ் மொழியை அழித்துள்ளனர். அதுவும் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்வு நடந்ததால் அங்கு பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதற்கிடையில், தமிழ் மக்களும் இலங்கையின் அரசியல் சட்டப்படி குடிமக்கள்தான் என்பதை உணர்ந்து மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.