Credits : Wahsington times
உலகம்

இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : உடனே தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணி சற்று நேரத்தில் தொடங்குகிறது.

உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிட்டார். இவர்கள் உட்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இன்று காலை வட கிழக்கு மாகாணத்தில் வாக்காளர்கள் சென்ற வேன் மீது, மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சராசரியாக 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்குச்சீட்டு பெட்டிகள் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

உடனடியாகம் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்த தபால் வாக்கு முடிவுகள் இரவுக்குள் அறிவிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து முடிவுகளையும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.