உலகம்

பாரிஸில் நூதன முறையில் கொள்ளை : ‘ஜோக்கர்’ திரைப்படத்தை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம்! - ஏன் தெரியுமா?

சமீபத்தில் டி.சி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் உலகம் பல இடங்களில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் சினிமா திரையரங்கில் இந்த படம் திரையிடப்பட்டது.

வழக்கம் போல இரவு நேரக்கட்சியில் பார்வையாளர்கள் சினிமாவை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திரையங்குகளின் நடு சீட்டில் இருந்த ஒருவர் திரைப்படத்தில் அமைதியான காட்சி வரும் போது இருக்கையின் மீது எழுந்து “அல்லாஹு அக்பர்” என்று கத்தினார்.

அப்போது முன் இருக்கையில் இருந்தவர் கையில் துப்பாக்கி வைத்திருக்கிறார் என்று அலறி அடித்து ஓட்டம் பிடித்தார். அடுத்தகணமே திரையங்குகளில் இருந்த மக்கள் இருக்கைகளின் மீது தாவிக்குதித்து ஓடினார்கள். அப்போது வாசலின் அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலிஸார் உள்ளேச் சென்று கூச்சலிட்ட நபரை கைது செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

கூச்சலிட்ட நபர்

பின்னர் திரையங்குகளில் வெடிகுண்டு வைத்துள்ளார்களா என மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். ஆனால் திரையங்குகளில் அப்படி எந்த பொருளும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் போலிஸார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் குற்றவாளி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாரிஸ் நகர போலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு பேர். மற்றொருவரையும் தற்போது கைது செய்துள்ளோம். மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, தொலைபேசிகளையும், பைகளையும் எடுத்துச் செல்வதற்காக இதுபோல கூச்சலிட்டுள்ளனர். இதேபோன்ற தந்திரத்தை ரயிலில் பயன்படுத்தியுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

நூதன முறையில் மக்களிடம் அச்சத்தை உருவாக்கி கொள்ளையடிக்க துணிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.