உலகம்

“இது பறக்கும் டாக்ஸி” : ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்திய ஊபர் - குவியும் வாடிக்கையாளர்கள்!

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பைக், ஆட்டோ, கார் சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் ஊபர், தற்போது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையைத் தொடங்கியுள்ளது.

ஊபர் ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை என்றதும் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டரை அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இந்த முதற்கட்ட சேவை அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் நகரின் டவுன்டவுன் என்ற இடத்தில் இருந்து ஜான் எஃப்.கென்னடி சர்வதேச விமான நிலையம் வரை தொடங்கப்பட்டுள்ளது.

ஊபர் ஹெலிகாப்டர் டாக்சி மூலம் ஒரு மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தை சில நிமிடங்களில் சென்றுவிடலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் சேவை தற்போது, திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகலில் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையின் மூலம் காரில் ஒரு மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தை சில நிமிடங்களில் சென்றுவிடலாம் என்பதால் அவசர காலத்தேவைக்கு பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பயணம் செய்ய கட்டணம் 200 அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் 14 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம். கட்டணம் அதிகமென்றாலும், இந்தச் சேவைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அமெரிக்காவின் மற்ற நகரங்கள் இடையேயும், இந்தியா உள்பட பல நாடுகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது. மின்சார விமானங்களைப் பயன்படுத்தி 2023-ம் ஆண்டிற்குள் ஏர் டாக்ஸி வணிகத்தைத் தொடங்குவதற்கான திட்டத்தை தற்போது இந்த சேவையின் மூலம் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை, குறுகிய பயண தூர வணிக சேவையில் ஹெலிகாப்டர் இல்லாதபோது இந்த சேவையை முதன்முதலில் ஊபர் தொடங்கியுள்ளது. தற்போது ஹெலிஃப்ளைட் என்ற நிறுவனத்தின் மூலம் ஹெலிகாப்டரை பெற்று, இந்த சேவையை ஊபர் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.