உலகம்

என்ஜின் செயலிழந்த விமானத்தை சோளக்காட்டுக்குள் தரையிறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானி! (வீடியோ)

ரஷ்யாவிலிருந்து, 233 பேருடன் கிளம்பிய விமானம் மீது பறவை மோதியதில் விமானத்தின் என்ஜின் செயலிழந்ததால், சோளக் காட்டுக்குள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி பயணிகளின் உயிரை காத்துள்ளார் விமானி.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சிம்ஃபெரோபோல் நகரை நோக்கி 226 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் என 233 நபர்களுடன் ஏர்பஸ் ஏ 321 என்ற விமானம் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தின் இரு என்ஜின்களின் மீது பறவை மோதியது. இதனால் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது. இதனால், விமானத்தை உடனடியாக மாஸ்கோவுக்கு புறநகரில் உள்ள சோளம் விதைக்கப்பட்டிருந்த நிலத்தில் விமானத்தைத் தரையிறக்கினார் விமானி.

ஆபத்து கருதி தகுந்த முன்னெச்சரிக்கை இன்றி அவசரமாகத் தரையிறக்கியதில், 9 குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. என்ஜின் செயலிழந்த நிலையில், தரையிறக்கும் கியர் இல்லாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானியை பயணிகள் பாராட்டியுள்ளனர்.