Viral

”நீங்க கொடி ஏத்துறத பாக்கனும்”.. கடிதம் எழுதிய 3ம் வகுப்பு மாணவன்: ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர்!

இந்திய நாட்டின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதேபோல் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக திறந்தவெளி வாகனத்தில் நின்று முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்த சிறப்பு மிக்க விழாவை நேரில் பார்க்க வேண்டும் என பள்ளி மாணவன் லிதர்சன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் "முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் இராமநாதபுரம் மாவட்டம், கழுதி வட்டம், பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்.

சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றத்தைப் பார்க்க எனக்கு ஆசையாக இருக்கு. நான் பார்க்கனும் போல இருக்கு. நானும் எங்க பள்ளியில் கொடி ஏற்றுவோம். சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா" என தனது ஆசையை மாணவன் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து லிதர்சனுக்கு சுதந்திர தின விழாவை நேரில் காணும்படி அழைப்பு வந்துள்ளது. பின்னர் லிதர்சனன் மற்றும் அவரது தாயர் இன்று சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியதைக் கண்டு ரசித்தனர்.

Also Read: “வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!