Viral

’காதலை என்னால் பிரிக்க முடியாது’.. திருமணம் நடந்து 20 நாளில் மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்!

பிரபல பாலிவுட் படமான Hum Dil De Chuke Sanam-ல் மனைவியை காதலித்த நபருடனே கணவன் சேர்த்துவைப்பதுபோன்று கதை இருக்கும். இந்த கதையில் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்திருப்பார்கள். முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டே படம் இருக்கும். இந்த படத்தில் வருவதைப்போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நிஜமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், பீச்சிலா கிராமத்தைச் சேர்ந்தவர் சனோஜ் சிங். இவருக்குக் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் பிரியங்கா தனது கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர விஸ்வகர்மா என்பவரை 10 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்.

இது அவரது பெற்றோர்களுக்குப் பிடிக்காமல் அவரை சனோஜ் சிங்கிற்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணம் முடிந்து காதலனை மறக்க முடியாமல் பிரியங்கா இருந்து வந்துள்ளார். மேலும் காதலனுடன் தினமும் தொலைப்பேசியில் பேசி வந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளனர். இதன்படி இருவரும் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் ஊர்மக்கள் இருவரையும் பிடித்து விட்டனர். பின்னர் அவரது கணவருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த சனோஜ் சிங்கிடம் நடந்தவற்றைப் பிரியங்கா எடுத்துக் கூறியுள்ளார். பின்னர் மனைவியைக் காதலனிடமே ஒப்படைத்துவிட்டு, இருவரும் சந்தோஷமாக இருங்கள். உண்மையான அன்பை என்னால் பிரிக்க முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.

Also Read: கீழே விழுந்து நொறுங்கிய இந்திய விமானப் படை விமானம்: Parachute உதவியுடன் உயர் தப்பிய பெண் விமானி!