Viral
மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் படம்!
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் அப்துல்லா - கதீஜா. இவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை 8 வயது இருக்கும் போது தத்தெடுத்துள்ளனர். இந்த பெண்ணின் பெற்றோர் இஸ்லாமிய தம்பதியின் பண்ணையில் வேலை பார்த்தவர்கள். இந்த அறிமுகத்தால் ராஜேஸ்வரியை இவர்கள் தத்தெடுக்க காரணமாக இருந்துள்ளது.
இதையடுத்து ராஜேஸ்வரியை படிக்க வைத்து தனது சொந்த மகளைப் போன்றே பார்த்து வருகின்றனர். இவருக்கு 22 வயதானதுடன் திருமணத்திற்கு இந்து மதத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையே தேடிவந்தனர். பின்னர், கன்ஹங்காட்டை பூர்வீகமாகக் கொண்ட விஷ்ணு பிரசாத் என்பவருடன் ராஜேஸ்வரிக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
இதன்படி மன்யோட் கோயிலில் விஷ்ணு பிரசாத் - ராஜேஸ்வரி திருமணம் இரு வீட்டார் குடும்பத்தினர் முன்னிலையில் மகிழ்ச்சியாக நடைபெற்றது. பின்னர் ராஜேஸ்வரி தனது வளர்ப்புத் தந்தையுடன் வாழ்த்து பெற்றார். அப்போது ராஜேஸ்வரி வாழ்த்து பெற்ற படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்துக் கூறிய இஸ்லாமிய தம்பதி, " 7 அல்லது 8 வயது இருக்கும் போது ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தாள். அவரது பெற்றோர் இறந்தபோது கூட அவர் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்குப் போகவில்லை. இவர் இந்து என்பதால் இந்து முறைப்படியே நாங்கள் திருமணம் செய்து வைத்தோம். எங்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவள் இந்து முறைப்படியே எங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறார்" என தெரிவித்துள்ளனர்.
வளர்ப்பு மகளுக்கு இந்து முறைப்படியே இஸ்லாமியத் தம்பதி திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இந்த தம்பதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் 2020ம் ஆண்டு இந்த திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த திருமண புகைப்படம் மீண்டும் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சிதைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, இந்தியாவில் மத நல்லிணக்கத்தை எப்போதும் சிதைக்க முடியாது என்பதற்கு இந்த திருமணப் புகைப்படம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!