Viral

தாயின் சிகிச்சைக்காக வாங்கிய நன்கொடை.. ஒருவருடம் கழித்து அனுப்பிய நபர்: இணையத்தில் வைரலாகும் பதிவு!

உலகில் நம்மைச் சுற்றி எத்தனையோ மோசமான விஷயங்கள் நடந்து கொண்டே இருந்தாலும் மனித நேயம் இன்றும் இருக்கிறது என்பதை உணர்த்தும் நிகழ்வுகளும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில், தாயின் சிகிச்சைக்காக முகம் தெரியாதவரிடம் நன்கொடையாக வாங்கிய பணத்தை ஒரு வருடம் கழித்துத் திருப்பி அனுப்பிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

கமல் சிங் என்பவரது போன்பேவுக்கு ரூ. 201 பணம் வந்திருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து இந்த பணத்தை யார் அனுப்பியது என்று கமல் சிங் பார்த்த போதுதான் ஒரு வருடத்திற்குத் தாயின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என முகம் தெரியாத ஒருவர் சமூகவலைதளம் மூலம் நிதி திரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து கமல் சிங் போன் பேவில் இருந்து மேஜ் அனுப்பி அவரிடம் பேசியுள்ளார். 'உங்கள் தாய் எப்படி இருக்கிறார்' என கேட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த அந்த நபர், "என்னுடைய தாய் நலமாக இருக்கிறார். என்னுடைய வியாபாரம் தற்போது நன்றாகச் செல்வதால் ஒரு வருடத்திற்குமுன்பு சிகிச்சைக்காக வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுத்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலைக் கமல் சிங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். "இன்றைய உலகம் வித்தியாசமானது. யாரோ ஒருவர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு மறந்துவிடுகிறார். அது அலுவலகத்தில் கூட இருக்கலாம். நேர்மை இன்னும் ஒருவரிடம் இருப்பதில் மகிழ்ச்சி" என இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ளார். இப்படி பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: 71 வயது முதியவருடன் நெருக்கமாகப் பழகி ரூ. 3 லட்சம் ஏமாற்றிய பெண்.. போலிஸில் சிக்கியது எப்படி?