Viral

ரூ. 388 நெயில் பாலிஷ் ஆர்டர் செய்து 92,000 ரூபாயை இழந்த இளம்பெண் : பகீர் கிளப்பும் ஆன்லைன் மோசடி!

சந்தைக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் குறைந்து, வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் வாங்குவதையே மக்கள் தற்போது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்று ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றவையாகவும், குறித்த நேரத்தில் வந்து சேராமலும் இருக்கும். இதனால் பல இன்னல்களும் உண்டாகின்றன. சமயங்களில் போலியான ஆன்லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து ஏமாறும் நிலையும் ஏற்படும்.

அந்த வகையில், மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் பெண் (25) ஒருவர், கடந்த டிசம்பர் 17ம் தேதி ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்துள்ளார். அதற்காக தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.388-ஐயும் செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து, வெகுநாட்களாகியும் நெயில் பாலிஷ் கிடைக்கப்பெறாததால், சம்மந்தப்பட்ட இணையதளத்தின் சேவை மையத்திடம் பேசிய போது, பணம் செலுத்தாததாலேயே அந்தப் பொருள் இன்னும் டெலிவரி செய்யப்படாமல் இருக்கிறது என்றும், உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள், பணம் வந்திருந்தால் உங்களுக்கு திருப்பி அனுப்பிவிடுகிறோம் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

தொலைபேசி எண்ணைக் கொடுத்த சில மணிநேரங்களில் அந்த பெண்ணின் இரண்டு தனியார் வங்கிக் கணக்குகளில் இருந்து 5 தவணையாக 90 ஆயிரத்து 946 ரூபாயும், பொதுத்துறை வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் ரூ.92,446 எடுக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்து அதிர்ச்சிக்குள்ளான இளம்பெண், போலிஸில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் வாடிக்கையாளர் மையத்திடம் செல்ஃபோன் நம்பரை தவிர வங்கிக் கணக்கு விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர், புகார் மீது தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதிகாரப்பூர்வமில்லாத ஆன்லைன் தளங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதை தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

Also Read: ‘மக்களே உஷார்...’ : அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி- பணப் பரிவர்த்தனை செயலி மூலம் ரூ.1.85 லட்சம் கொள்ளை!