Viral

போலிஸ் வாகனத்தில் ஏறி ‘டிக்டாக்’ வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு தூத்துக்குடி காவல்துறை கொடுத்த தண்டனை!

செல்ஃபி, டிக்-டாக் மோகத்தால் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விபரீதங்களையும், பின்விளைவுகளையும் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் தூத்துக்குடியில் போலிஸாரின் வாகனம் மீது ஏறி விஜய் பட வசனம் பேசி டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தென்பாகம் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலிஸ் வாகனம் மீது ஏறி லெவிஞ்சிபுரம், முனியபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் வரும் வசனத்தைப் பேசி டிக்-டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இளைஞர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்திய தென்பாகம் போலிஸார், அவர்களுக்கு காவல்துறைப் பணியின் சிரமம் குறித்து அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், இளைஞர்கள் செய்த செயல் தவறு என்றும், காவல்துறையினரின் பணி எவ்வளவு சிரமம் என்பதை உணர்த்தும் வகையிலும், மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடும் படி போலிஸார் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து காலை முதல் மாலை வரை போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டதோடு தாங்கள் செய்த தவறை உணர்ந்ததால் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதியாமல் போலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Also Read: தனியார்மயமாக்கலை எதிர்த்து போராட்டம் நடக்கும்போதே, பெல் கம்பெனி பங்குகளை விற்க ஒப்புதல் அளித்த மோடி அரசு!