Viral
போலிஸ் வாகனத்தில் ஏறி ‘டிக்டாக்’ வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு தூத்துக்குடி காவல்துறை கொடுத்த தண்டனை!
செல்ஃபி, டிக்-டாக் மோகத்தால் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விபரீதங்களையும், பின்விளைவுகளையும் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் தூத்துக்குடியில் போலிஸாரின் வாகனம் மீது ஏறி விஜய் பட வசனம் பேசி டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தென்பாகம் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலிஸ் வாகனம் மீது ஏறி லெவிஞ்சிபுரம், முனியபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் வரும் வசனத்தைப் பேசி டிக்-டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இளைஞர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்திய தென்பாகம் போலிஸார், அவர்களுக்கு காவல்துறைப் பணியின் சிரமம் குறித்து அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர், இளைஞர்கள் செய்த செயல் தவறு என்றும், காவல்துறையினரின் பணி எவ்வளவு சிரமம் என்பதை உணர்த்தும் வகையிலும், மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடும் படி போலிஸார் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து காலை முதல் மாலை வரை போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டதோடு தாங்கள் செய்த தவறை உணர்ந்ததால் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதியாமல் போலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!