Viral

தந்தை பெரியார் குறித்து சாமியார் ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு : இந்திய அளவில் டிரெண்ட் ஆன ‘#ArrestRamdev’!

யோகா சாமியார் பாபா ராம்தேவ் சமீபத்தில் அரசியல் சட்ட மாமேதை அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த பாபா ராம்தேவ், டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியாரை பின்பற்றுபவர்களை கண்டு, தான் கவலை கொள்வதாகவும், அஞ்சுவதாகவும், தந்தை பெரியாரை "அறிவார்ந்த தீவிரவாதி" என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசிை நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சிந்தனை கொண்ட கும்பலுக்கு, ஒவைசி தலைவரை போல் செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாபா ராம்தேவின் இத்தகைய பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெரியார், அம்பேத்கர் குறித்த தனது கருத்துக்கு, பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், ட்விட்டரில் பாபா ராம்தேவ்வை கைது செய்யவும், பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கக் கோரியும் ட்விட்டரில் #RamdevInsultsPeriyar, #ArrestRamdev, #ShutdownPatanjali என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பாபா ராம்தேவின் கருத்துக்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் #ArrestRamdev என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.