Viral

5ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இத்தனை ஆவணங்களா ? - மக்களை வதைக்கும் அரசால் புலம்பும் பொதுமக்கள்

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அண்மையில் அறிவித்திருந்தது.

புதிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியான 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முறையை பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட செயல்படுத்தவில்லை.

ஆனால், பா.ஜ.க.,வின் அடிமை அரசாகச் செயல்படும் அ.தி.மு.க அரசு முதல் ஆளாக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என கூறியிருப்பது பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.

ஓடி ஆடி விளையாடும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு சாதாரண கல்வியைக் கொடுப்பதற்கு பதில், பொதுத்தேர்வு என்ற ஒன்றை சுமத்தினால் மாணவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என குழந்தைகள் நல ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேவைப்படும் ஆவணங்கள் என ஒரு பட்டியலை தகவல் பலகையில் பதிவிட்டுள்ளனர். அதில், மாணவரின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர் வருவாய் சான்றிதழ், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் எண் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், தனியார் பள்ளியைக் காட்டிலும் அரசு பள்ளியில் இந்த மாதிரியான ஆவணங்கள் கேட்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.