Viral

“திருடிய செல்போனை திருப்பிக் கொடுக்கணும்னா ரூ.6,000 கொடுங்க...” - போலிஸாரிடமே பேரம் பேசிய கொள்ளையன்!

திருவள்ளூரில் அரசு பெண் ஊழியரின் வீட்டில் இருந்து 16,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் செல்போனை கொள்ளையன் ஒருவன் திருடிச்சென்றுள்ளான். செல்போனை திருடிய கொள்ளையன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் இருந்துள்ளான்.

அந்தப் பெண்ணின் தம்பி திருடனுக்கு தொடர்புகொண்டு, செல்போனை திரும்பக் கேட்க, அதற்கு கொள்ளையன் 6,000 ரூபாய் தந்தால் செல்போனை திருப்பி தருவதாக கூறியுள்ளான். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினரும் கொள்ளையனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியபோது காவல்துறையினரிடமும் 6,000 ரூபாய் பணம் கொடுத்தால் செல்போனை திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளான்.

மீண்டும் செல்போன் உரிமையாளர்களிடம் பேசிய திருடன் நீங்கள் காவல்துறையில் புகார் அளித்தாலும் சரி நீங்கள் ஆறாயிரம் ரூபாய் கொடுத்தால் செல்போனை எப்படி திருடினேனோ, அதேபோல் வந்து செல்போனை வைத்துவிட்டு பணத்தை வாங்கிச் செல்வதாக வாக்குறுதி அளிக்கிறான். கொள்ளையன் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.