Viral

டூட்டியை கட் அடித்துவிட்டு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ சினிமாவுக்குப் போன 7 போலிஸாருக்கு நேர்ந்த கதி தெரியுமா?

நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் நேற்று வெளியான படம் சைரா நரசிம்மா ரெட்டி. 1700-களில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா ரெட்டியின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு அமைந்தது இந்தப் படம். சிரஞ்சீவியின் சிலகால இடைவெளிக்குப் பின் நடிக்கும் படம் என்பதால் ஆந்திரா, தெலங்கானாவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படம் அமைந்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் சைரா நரசிம்மா ரெட்டி படம் 7 போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்களின் வேலைக்கே உலை வைத்து விட்டது. பொதுவாக அபிமான நடிகர்களின் படங்கள் ரிலீஸானால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு செல்வார்கள்.

அதேபோல் இவர்களும் பணி நேரத்தில் தியேட்டருக்கு சென்று சைரா படத்தை பார்த்ததுடன் ஆட்டம் போட்டு மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுத்த படம் வெளியில் கசிந்ததால் இப்போது சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார்கள். அந்த 7 சப் இன்ஸ்பெக்டர்களும் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்றைய தினம் காந்தி பிறந்தநாள் என்பதால் நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. இந்த கூட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் சிரஞ்சீவி நடித்த படத்தை மேற்கண்ட 7 சப்-இன்ஸ்பெக்டர்களும் முதல் காட்சி பார்த்துள்ளனர்.

இந்த போலிஸார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்கள் என்பதால் திரையில் சிரஞ்சீவி வரும்போது உற்சாக மிகுதியால் ஆட்டம் போட்டுள்ளனர். அதை படமாகவும் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்தத் தகவல் கர்னூல் எஸ்.பி. பகீரப்பா கவனத்துக்கு தகவல் சென்றது. அவர் டூட்டி நேரத்தில் கட் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போன 7 போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு டிஎஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, படம் முடித்து வெளியே வந்த 7 பேருக்கும் உயர் அதிகாரியிடம் இருந்து சஸ்பெண்ட் உத்தரவு வந்துள்ளது. சிரஞ்சீவி படம் பார்த்த அந்த 7 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.