Viral

‘Tik Tok’ தோழியுடன் மாயமான பெண் காவல்நிலையத்தில் சரண் : கணவர் கொடுமை என புகார் - குழப்பத்தில் போலிஸ் !

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவரது மனைவி வினிதா. திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே மனைவியை சிவகங்கையில் விட்டுவிட்டு, வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார் லியோ.

அதன் பின்பு வீட்டில் இருந்த நேரத்தில் பொழுதுபோக்கிற்காக டிக்டாக்(TikTok) செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார் வினிதா. அப்போது வினிதாவுக்கு திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் தொடர்ச்சியாக வீடியோக்களை எடுத்து பகிர்ந்துள்ளனர்.

மனைவியின் இந்த டிக்-டாக் வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்துபோன லியோ, சிங்கப்பூரில் இருந்து அவசரமாக ஊருக்குத் திரும்பினார். பின்னர் வினிதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனிடையே வினிதா இரண்டு நாட்களுக்கு முன் 40 சவரன் நகைகளுடன் காணாமல் போனதாக போலிஸாரிடம் லியோ புகார் அளித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

இதனையடுத்து இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து திருவாரூரைச் சேர்ந்த அபி, இதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது மாயமான வினிதா நேற்றைய தினம் சிவகங்கை மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

மேலும், தான் எந்த நகைகளும் எடுத்துச் செல்லவில்லை என்று கூறி, தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய கணவர் மற்றும் தாய் மீது புகார் கடிதம் ஒன்றையும் காவல் நிலையத்தில் வினிதா அளித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வினிதா, “அபியை டிக் டாக் மூலம் தான் தெரியும். அவர் என்னுடைய தோழி, அவ்வளவுதான். ஆனால் அதனைப் புரிந்துக்கொள்ளாமல் என்னுடைய கணவர் என்னை தந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தினார். அதனால் தான் வீட்டை விட்டு வெளியெறினேன்.

அதுவும், நான் அந்த பெண்ணுடன் சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த நகைகளை எடுத்து சென்றதாகவும் பொய்யான செய்தியை கிளப்பிவிட்டுள்ளார்கள். இந்த செய்தியினால் அபி எதாவது செய்துக்கொண்டால் அதற்கு என்னுடைய கணவரும் அம்மாவும் தான் காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.

40 சவரன் நகைகளை எடுத்துசென்ற சென்றதாக கூறப்பட்டுவந்துவந்த நிலையில் பெண் நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளித்துள்ளதால், தற்போது இந்த வழக்கு வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.