Viral

40 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு ‘TikTok’ தோழியுடன் புதுமணப்பெண் மாயம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆனது. திருமணம் ஆன 45 நாட்களுக்குப் பிறகு மனைவி வினிதாவை சிவகங்கையில் விட்டுவிட்டு, வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார்.

அதன் பின்பு வீட்டில் இருந்த நேரத்தில் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார் வினிதா. அப்போது வினிதாவுக்கு திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் தொடர்ச்சியாக வீடியோக்களை எடுத்து பகிர்ந்துள்ளனர்.

மனைவின் இந்த டிக்-டாக் வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்துபோன லியோ, தன் மனைவியிடம் இனி இதுபோன்ற வீடியோக்களை எடுக்கக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனாலும் வினிதா கண்டுக்கொள்ளாமல் தனது போக்கிலேயே வீடியோக்களை வெளியிட்டு அபியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பழக்கம் அதிகரித்து, அபியின் படத்தை டாட்டூவாக தனது கையில் வினிதா வரைந்துள்ளார். மேலும் கையில் டாட்டூவுடன் வீடியோ எடுத்து அதனையும் பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லியோ, சிங்கப்பூரில் இருந்து அவசரமாக ஊருக்குத் திரும்பினார்.

அப்போது வீட்டில், வினிதாவுக்கு அபி அனுப்பி வைத்திருந்த ஏராளமான பரிசுப் பொருட்கள் இருந்துள்ளன. மேலும், லியோ அனுப்பி வைத்திருந்த பணம், திருமணத்தின் போது வினிதா அணிந்திருந்த நகைகள் காணமல் போயுள்ளன.

இதுகுறித்து லியோ கேட்டபோது வினிதா எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லியோ வினிதாவை அவரது பெற்றோர் விட்டிற்கு அழைத்துச்சென்று நடந்ததைக் கூறி அங்கு விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் வீட்டில் இருந்த வினிதா, அடுத்த இரண்டு நாட்களில் காணாமல் போனதாக குடும்பத்தினர் லியோவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் வினிதாவின் அக்கா நகைகள் 25 சவரனைக் காணவில்லை என தெரிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து லியோ, திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினிதா, தனது‘டிக்டாக்’ தோழியுடன் மாயமானாரா? என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.