Viral

ஒரே இடத்தில் 86 புலிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு... சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கின் மேற்கு பகுதியில் உள்ளது காஞ்சனாபூரி. அங்குள்ள புத்தர் கோவிலை ‘புலிக்கோவில்’ என்று அழைக்கின்றனர். அந்தக் கோவில் அமைந்துள்ள வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான புலிகளும், புலிக்குட்டிகளும் வாழ்ந்து வருகின்றன.

அந்தக் கோவிலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புலிகளோடு புகைப்படம் எடுத்துகொள்வது வழக்கம். இதனாலேயே அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், அங்கு புலிகள் கடத்தப்படுவதாகவும், சுற்றுலா பயணிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு புலிக்குட்டிகளை விற்பதாகவும் தகவல்கள் பரவின.

அதன் அடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் இருந்த ஒரு குளிர்சாதன பெட்டியில் பல புலிக்குட்டிகளின் சடலங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, புலிக்கோவிலில் இருந்து 147 புலிகள் மீட்கப்பட்டன. அவற்றை அருகில் இருக்கும் ரட்சபுரி மாகாணத்தில் உள்ள 2 இனப்பெருக்க நிலையங்களுக்கு கொண்டு சென்று பராமரித்தனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட புலிகளில் 86 புலிகள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக இறந்துவிட்டதாகவும், 61 புலிகள்தான் உயிர்பிழைத்து இருப்பதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் தொடர் இறப்பிற்கு, சுவாசக் கோளாறு மற்றும் சில வைரஸ் நோய்கள் ஆகியவையே காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புலிகள் ஆரோக்கியமாக வாழ போதிய இடைவெளி இல்லாததும் புலிகளுக்கு நோய்த்தொற்று விரைவாகப் பரவியதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

உலகில் புலிகள் இனம் அருகிவரும் நிலையில் ஒரே இடத்தில் 86 புலிகள் உயிரிழந்திருப்பது சூழலியல் ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.