Viral

“இது பைக்கா... இல்ல லோடு ஆட்டோவா?” - மொத்தக் குடும்பமும் இணைந்து ஒரு சாகசப் பயணம்! (Video)

இருசக்கர வாகனங்களில் அதிகபட்சம் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது போக்குவரத்து விதி. இப்போது இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவருமே தலைக்கவசம் அணியவேண்டும் எனவும் மீறுவொருக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, ஒருவர் தனது பெரிய குடும்பத்தையே ஒரு இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே இருசக்கர வாகனத்தில் 7 மனிதர்கள், 3 நாய்கள், கோழி, பல பொருட்கள் என வண்டியின் எந்தவொரு பாகமும் வெளியே தெரியாதபடிக்கு முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். சாலையில் சென்ற இன்னொரு இருசக்கர வாகனத்திலிருந்து இந்த சாகசப் பயணத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஓட்டுபவர் மற்றும் அவரது மனைவியோடு, 5 குழந்தைகளும், பக்கவாட்டில் ஒரு நாய், வண்டியின் முன்புறம் ஒரு நாய், போதாக்குறைக்கு நடுவில் ஒரு நாய், பின்னால் கோழிகள் என ஒரு வீடே நகர்ந்து செல்வது போல அந்தக் காட்சி இருக்கிறது.

“இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்” எனக் குறிப்பிட்டு ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோவை பலரும் பரப்பி வருகின்றனர். அதேநேரம், மிக ஆபத்தான பயணம் எனவும் பலர் கண்டித்துள்ளனர்.