Viral

“ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படாத இந்த அதிகாரம் எதற்கு?”: பதவியை துச்சமென தூக்கியெறிந்த ஐஏஎஸ் அதிகாரி!

கடந்த ஆண்டு ஏற்பட்ட கேரள வெள்ளத்தின்போது, தன்னை யாரென்றே அடையாளப்படுத்திக் கொள்ளாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் ஆதரவையும் கவனத்தையும் பெற்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தற்போது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 21-ம்தேதி இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறார். இது கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த சில நாட்களாக நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றிக் குழப்பம் அடைந்துள்ளேன். பெரும் பகுதி மக்களுக்கு தங்கள் அடிப்படை உரிமைகளே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசும் பதில் அளிக்க மறுக்கிறது.

முன்னதாக சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முன்னாள் அரசு ஊழியர் ஷா பைசலை தடுத்து கைது செய்துள்ளார்கள். அதற்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. சரி அதற்கு நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள் என்றால் நான் என் பதவியை ராஜினாமா செய்தேன் என்று சொல்வேன்.” எனக் கூறியுள்ளார்.

மேலும், “ஜனநாயக நாட்டில் ஒரு மாநிலத்திற்கே தடைவிதித்திருப்பது ஜனநாயக மீறல் , அரசின் இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானது. மக்களுக்காக குரல் கொடுக்க என்னுடைய அதிகாரம் பயன்படும் என நம்பினேன். அதனால் தான் ஐ.ஏ.எஸ்-பொறுப்பைத் தேர்வு செய்தேன்.

ஆனால் தற்போது அந்த நம்பிக்கை இல்லை, சுதந்திரமாக என் கருத்தைக் கூட தெரிவிக்க முடியவில்லை. இது சரியல்ல என்று எனக்குத் தெரியும்; அதனால்தான் இந்தப் பதவியில் நான் இருக்க விரும்பவில்லை” என கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு குறித்து கண்ணன் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார். அவரது இந்த முடிவுக்கு சிலர் அதிருப்தி தெரிவித்தும், சிலர் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.