Viral

“போன ஜென்மத்து பந்தம்” எனக்கூறி இளம் பெண்ணை வலையில் வீழ்த்தி ஏமாற்றிய போலி ஜோதிடர்

கர்நாடக தலைநகர் பெங்களூரிலுள்ள ஹனுமந்த் நகரை சேர்ந்தவர் ஜோதிடர் வெங்கட் கிருஷ்ணாச்சார்யா. போலி ஜோதிடரான இவர், தன்னிடம் வரும் பெண்களை ஏமாற்றித் தொடர்ந்து பணம் பறித்துவந்துள்ளார்.

இவரிடம் 25 வயது மதிக்கத்தக்க பட்டதாரி பெண் ஒருவர் ஜோதிடம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணிடம், "நானும் நீயும் போன ஜென்மத்துல கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கோம். அப்போ நான் உனக்கு செஞ்ச பாவத்தாலதான், இந்த ஜென்மத்துல இப்படி பிரிஞ்சு கஷ்டப்படுறோம்" என்று பேசியவர் அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

ஒருகட்டத்தில் இந்த விஷயம் அப்பெண்ணின் பெற்றோர்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஜோதிடரைத் தான் திருமணம் செய்வேன் என்று அந்த இளம்பெண் பிடிவாதம் பிடித்துள்ளார். தன் மகளின் நிலை குறித்தும், போலி ஜோதிடரிடம் தன் மகள் சிக்கிக் கொண்டது குறித்தும் அப்பகுதி பெண்களிடம் கூறியுள்ளனர்.

இதையெடுத்து, பெண்கள் படை ஜோதிடர் வீட்டுக்கு படையெடுத்துச் சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறது. பின்னர், போலி ஜோதிடர் போலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் அந்த ஜோதிடர் அப்பெண்ணின் பெயரில் வங்கியில் ரூ. 40 லட்சம் கடன் வாங்கியிருப்பதும், அந்த தவணைகளை அப்பெண் கட்டிவருவதும் தெரியவந்தது. மேலும், அந்த பெண்ணை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.