Viral

சுடுகாட்டுக்குப் போக வழி இல்லை : சாதி கொடுமையால் சடலத்தை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய அவலம் !

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் புத்துக்கோயில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு குப்பன் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு இறுதிச் சடங்குகளை செய்ய அவரது கிராமத்திற்கு சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

சடங்குகள் முடிந்து அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் சுடுகாட்டிற்குச் சென்றுள்ளனர். வழக்கமாக சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையில் உள்ள நிலத்தின் உரிமையாளர் இரும்பு முள் வேலி அமைத்து பாதையை மூடியுள்ளார். இதனால் கிராம மக்களும், உறவினர்களும் வழிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனாலும், சாதியைக் காரணம் காட்டி நிலத்தின் உரிமையாளர் வழிவிட மறுத்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற பிரச்னையை மனதில் வைத்தும், சாதியைக் காரணம் காட்டியும் வழியை மறைத்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் திகைத்துப்போன உறவினர்கள் செய்வதறியாது தவித்தனர். பின்னர் சுடுகாட்டிற்குச் செல்ல வேறு வழி இல்லாததால் சடலத்தை பாலத்தில் இருந்து கட்டி கீழே இறக்க முடிவு எடுத்துள்ளனர். 20 அடி பாலத்தில் சடலத்தைக் கயிற்றால் கட்டி கீழே இறக்கியுள்ளனர். பின்னர் ஆற்றின் கரையோரத்தில் இருந்த சுடுகாட்டிற்கு சடலத்தைத் தூக்கிச் சென்று தகனம் செய்தனர். சாதிய ஒடுக்குமுறை காரணமாக நிகழ்ந்த இந்தக் கொடுமை அப்பகுதி மக்களிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது.