Viral

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்து நெகிழ வைத்த நடிகை 

கேரளாவில் மழை வெள்ளத்தின் காரணமாக அம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு பலர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் தங்கள் பங்கிற்கு நிவாரண உதவிகளை செய்துவரும் நிலையில், மலையாள திரைப்பட நடிகையும், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவருமான சரண்யா தனது புற்றுநோய் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியில் உருக வைத்துள்ளார்.

இதனை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகையின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டினையும், நன்றியையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதைப்போன்று மலையாள சினிமா முன்னணி நடிகரான பிருத்விராஜ் தனது சொகுசு காருக்கான சிறப்பு எண்ணுக்கான தொகையை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்து பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிருத்விராஜ், தனது சொகுசு காருக்கு, சிறப்பு எண் ஒன்றினை கொச்சியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். ‘7777’ என்ற அந்த எண்ணுக்கு பலத்த போட்டி ஏற்பட்டது.

ஒரே எண்ணிற்கு பலர் விண்ணப்பித்தால், அந்த எண் ஏலத்தில் விடப்படுவது வழக்கம். அதிக தொகை கேட்பவர்களுக்கு அந்த சிறப்பு எண் ஒதுக்கப்படும். இந்நிலையில் போட்டியில் இருந்து விலகியுள்ள நடிகர் பிருத்விராஜ், ஏலம் எடுக்கும் பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கும் சமூகவலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.