indonesia floods
Viral

இந்தோனேசியாவில் கடும் வெள்ளம் மழை ; 50 பேர் பலி 

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்துக்கு 50 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் உள்ள சென்டேனி பிராந்தியத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள், வீட்டிலிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.

மேலும், மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்துக்கு இதுவரை அங்கு 50 பேர் வரை உயிரிழந்திருப்பதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். எனினும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சென்டேனி பிராந்தியத்தில் 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் தற்போது சுமார் 5 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களை வழங்கும் பணிகள், போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது.