Tamilnadu

“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!

தவெக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. இதற்கெல்லாம் பொறுப்பேற்காத தவெக, எதெற்கெடுத்தாலும் திமுக மீதே பழியை சுமத்தி ஒவ்வொரு விஷயத்தையும் திசைதிருப்பி வருகிறது. அதோடு எதிர்க்கட்சியினர் மீது காவல்துறையை வைத்து அடக்குமுறையை கையாள்கிறது இந்த அரசு.

தொடர்ந்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி, பயமுறுத்தி வருகிறது. அண்மையில் கூட எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு ஆகியோர் வீடுகளில் தவெக அரசு ரெய்டு நடத்தியது. இந்த சூழலில் இன்று (செப்.16) முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்த சூழலில் யார் பணத்தையும் தொட மாட்டேன் என்று சொல்லிட்டு, மக்கள் வரிப் பணத்தில் லண்டன் சென்று கார் ரேஸ் பார்க்கிறார் விஜய் என்று கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களின் பேட்டியின் விவரம் வருமாறு :-

தவெக அரசின் மீதான மக்களின் எதிர்ப்பை, அதிருப்தியை திசை திருப்பவே எதிர்க்கட்சியினர் மீது ரெய்டு நாடகம் அரங்கேறுகிறது. தவெக அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் செய்துகொண்டிருக்கும் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் வந்துகொண்டு இருக்கிறது. அதனை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோம்.

பட்டப்பகலில் படுகொலை நடக்கிறது. நேற்று மட்டும் 6 கொலைகளுக்கு மேல அரங்கேறியுள்ளது. அதே போல் நிகழ்ச்சி ஒன்றில் சிங்கப்பெண் படையை சேர்ந்த பெண் போலீசாரிடம் சில்மிஷம் செய்திருக்கிறார் தவெக நிர்வாகி ஒருவர். அதோடு திருப்பதி கொடை ஊர்வலத்தில் பெண் போலீஸிடம் தவெக காரன் பாலியல் தொல்லை கொடுக்க கூடிய அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த விஷயம் வெளியே வரவும் காவல்துறை அந்த நபரை கைது செய்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவரை போலீசார் விடுதலை செய்துள்ளது. அந்த விடுதலைக்கு பின்னால் யார் இருந்தது.? இதெல்லாம் மக்கள் மத்தியிலே இன்றைக்கு செய்தியாக வந்துள்ளது.

அது மட்டுமல்ல எல்லா விலைவாசியும் ஏறி போயுள்ளது. திமுக ஆட்சி இருக்கும்போது அரசி ஒரு மூட்டை ரூ.1600 வித்தது. இன்றைக்கு ரூ.2200 ஒரு மூட்டைக்கு 600 ரூபா அதிகரித்துள்ளது. அதே மாதிரி பருப்பு ஒரு கிலோ ரூ.160 வித்தது இப்போது ரூ.190, சர்க்கரை ரூ.40-ல் இருந்து, தற்போது ரூ.74 ஆகி இருக்குது. ஆக பொதுமக்கள் இன்னைக்கு மிகவும் அதிருப்தியில இருக்காங்க. விலைவாசி ஏறி போச்சு பல இடங்களில் குடிக்கிறது தண்ணி இல்லாம இன்றைக்கு குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு போச்சு அது மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு கெட்டு போச்சு, மின்வெட்டு இருக்கிறது. சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுக்கும் போதே மின்வெட்டு இதான் அவங்க லட்சணம். மின்துறை அமைச்சர் பேசுற இடத்திலே மின்வெட்டு நடந்திருக்கு. இதை எல்லாம் மறைத்து மக்கள் மத்தியில் இருக்கிற கோபத்தை திசை திருப்புவதற்காக இதுபோல ரெய்டு நடத்தி தப்பிக்க நினைக்கிறார்கள்.

நான் கேக்குறேன்.. திடீர்னு இப்ப எதுக்கு ரெய்டு தேர்தல் நேரத்தில இது ஒரு செய்தியா வரனும். தவெக போட்டுள்ள இரண்டு வேட்பாளர்களையும் ஊருக்குள் நுழையக்கூடாது என மக்கள் உணர்ச்சியோட வந்துட்டாங்க. காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆகிவிட்டு பணத்தை வாங்கி கொண்டு கட்சி மாறியது அயோக்கியத்தனம் கேவலம். ஆகவே அவர்களை தொகுதி மக்களே விரட்டுறாங்க.

மதுராந்தகத்தில, தாராபுரத்தில நாமினேஷன் போட்டுவிட்டு ஊருக்குள் போக முடியவில்லை வீரட்டறாங்க. இதை எல்லாம் திசை திருப்புகிற முயற்சியில் இன்றைக்கு இந்த ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் இதெல்லாம் பார்த்து பழக்கப்பட்டுவிட்டோம். எங்க தலைவர இதே DVAC தான் வந்து கலைஞரை 2001 நல்லிரவுல கைது செஞ்சாங்க. 25 வருஷம் ஆகுது. இதுவரைல ஒரு வழக்கு போட்டாங்களா? முடிஞ்சதா.? ஒரு நாள் செய்தி அது மக்கள் மத்தியில தேர்தல் நேரத்துல பரப்பணும்னு பா்கறாங்க. இதெல்லாம் மக்கள் வந்து பார்த்து பார்த்து அலுத்து போயிட்டாங்க.

மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. போதுமான மின்சாரம் இல்லை. விலைவாசி ஏறி போயிருக்கு, சட்டம் ஒழுங்கு கெட்டு ரோட்ல நடமாட முடியல , பட்டப்பகல்ல வெட்டுறான். இதை சரி செய்யனும்ணு தான் மக்கள் எதிர்பார்க்கறாங்க. போலீஸ்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை இந்த ஆட்சியில் இருக்குது. ஆகவே இதை எல்லாம் திசை திருப்பும் முயற்சி இந்த ரெய்டு.

லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு. உத்தர பிரதேசத்தில இருக்கற ஒரு கம்பெனி ஏற்கனவே 32 கம்பெனி தமிழ்நாட்டில இருக்கு. உத்தர பிரதேச கம்பெனிக்கு போய் லண்டன்ல கையெழுத்து வாங்குறாங்க. டெல்லியில கூட வாங்கிருக்கலாமே. ஆக ஒரு பொய்ய ரொம்ப நாளுக்கு சொல்லிட்டு இருக்க முடியாது. கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளுதான் சொல்வாங்க. அவர் அங்க இருந்து வரதுக்குள்ள எல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துருச்சு.

மக்கள் உணர்ந்து கொண்டார்கள். இந்த மூணு மாசத்தில் நடந்தத எல்லாம் பார்த்து செஞ்ச தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிற வகையில் நல்ல முடிவை வழங்குவார்கள். தளபதி முக.ஸ்டாலின் அவர்கள் செய்த சாதனை எல்லாம் இப்பதான் எல்லாருக்கும் உணர ஆரம்பிச்சிட்டாங்க இதற்கெல்லாம் இரண்டு இடைத்தேர்தல்ல நல்ல முடிவை மக்கள் தருவார்கள் நிச்சயமா இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்.

ஜூலையில முடிஞ்ச வேலைக்கு ஆகஸ்ட்ல டெண்டர் வைக்கிறாங்க. இதெல்லாம் வினோதமான நிகழ்ச்சிகள். இப்படி பல காட்சிகளை தமிழ்நாட்டில் அரங்கேற இருக்கிறது. ரீல்ஸ்ல ஆட்சிக்கு வந்தது முதல் ரீல் விட்டுட்டு இருக்காங்க. கட்டி முடிச்ச சிலைக்கு ரெண்டர் வைக்கிறாங்க. இதுதான் மாற்றம். இது மட்டும் இல்ல எல்லா இடத்திலயும் ஊழல் லஞ்சம் தலைவிரித்து ஆடுறத இன்னைக்கு எல்லாரும் பார்கறாங்க. ஒவ்வொரு அமைச்சரும் எம்எல்ஏவும் என்னென்ன ஊழல் பண்ணிட்டு இருக்காங்க எல்லாம் என்கிட்ட வந்துட்டு இருக்கு. சட்டத்துறை அது தீவிரமா பைல் பண்ணிட்டு இருக்காங்க. உரிய நேரத்தில் அதை வெளிப்படுத்தி வழக்கு தொடுப்போம்.

யார் பணத்தையும் தொட மாட்டேன்னு சொல்லிட்டு மக்கள் வரிப் பணத்தில தான போய் கார் ரேஸ் பார்கறாரு. அங்க அவர் பணத்துல போக வேண்டியது தானே. அவர் வாங்கிய காருக்கே ஒரு கோடி ரூபாய் ஹைகோர்ட் தண்டனை கொடுத்தது அபராதம் போட்டது. தமிழ்நாட்டிலே ஒரு கோடி ரூபாய் அபராதம் கட்டி விட்டுட்டு ஒரு முதலமைச்சரா இருக்கறது இவர்தான்.

பட்டினப்பாக்கம் மீனவர்களை பாதிக்கும் வகையில் புதிய தலைமை செயலகம் அமைக்க கூடாது. பெருந்தலைவர் காமராஜ் இருக்கிற போதுதான் போர்ஷோர் எஸ்டேட் கட்டினது. அது கட்டினதே மீனவர்களுக்காகதான். 50 60 வருஷ பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சரா இருக்கிற போது அப்பல்லாம் ஹவுசிங் போர்டு கிடையாது சிட்டி இம்ப்ரூவமென்ட் டிரஸ்ட் தான். வெங்கட்ராமன் மந்திரியா இருந்த போது காமராஜர் கூப்பிட்டு இந்த மீனவர்களுக்கு எல்லாம் அவங்க ஏன் இந்த மாதிரி குடிசை போட்டுட்டு இருக்காங்க மழை வந்தா எங்க போவாங்கணு மாடி வீடு கட்டுன்துதான் போர்ஷோர் எஸ்டேட். ஆனா அங்க மீனவர்கள் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால தான் அதை அரசு ஊழியர்களுக்கு கொடுத்தாங்க.

இது ஏன்னா காமராஜர் பேர் தெரியாதவங்கல்லாம் இன்னைக்கு ரெண்டு பேர் மந்திரியா இருக்காங்கல்ல இதெல்லாம் அந்த ரெண்டு மந்திரிக்கு இந்த ஹிஸ்டரி தெரியுமான்னு கேளுங்க. காங்கிரஸ் மந்திரிகள் அவங்க எதிர்க்க வேண்டாமா இதை. காமராஜர் கட்டின இடம் அது ஹவுசிங் போர்ட்ல இருந்து அதுக்கப்புறம் அப்படியே திமுக ஆட்சி வந்த பிறகு கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இப்போது அந்த மக்களை அப்புறப்படுத்த பார்க்கிறது இந்த அரசு.

Also Read: ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!