Tamilnadu

தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் வண்ணமாக இருக்கிறது. குறிப்பாக கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை பெருமளவு அதிகரித்துள்ளது. மேலும் சிறார்களுக்கு போதை பழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நள்ளிரவு நேரத்தில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு அருகே வண்ணான்துறை பகுதியில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியான தவெக பிரமுகர் கண்ணன் (45) என்பவர், நேற்று இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் சாலை ஓரத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஹெல்மெட் அணிந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணனை அரிவாளால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து இது முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 2009-ம் ஆண்டு சிவா என்பவரை கொலை செய்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்குவதற்காகத் தான் இந்த கொலை அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொலை செய்யப்பட்ட கண்ணன் என்பவர் தலைமையிலான கும்பல் தான் சிவாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :-

நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!

தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?

இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

Also Read: “பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!